Tuesday, July 4, 2023

லட்சுமிப் பாட்டி ( என் அம்மாயி )

 


லட்சுமிப் பாட்டி(என் அம்மாயி) 21.06.2023 ல் தனது 82வது வயதில் இயற்கை எய்தினார்.  அத்தகைய பொக்கிஷத்தைப் பற்றிய சில வரிகள்.
 
 
அம்மாச்சி என்ற பொழுதிலும் பல நேரங்களில் தாயாய் இருந்தவள். பொறுமையும் ஈகை குணமும் இயல்பாய் பிறந்தவள்.
தன் 27 வயது மகனை நோய் தீண்டிய போதும் அந்த நோயால் மகனை இழந்த பின்பும் தீராத மன தைரியத்தோடு வாழ்வை எதிர் கொண்டவள்.

மேட்டாங்காட்டில் வெயிலில் காடு,கரை, அடுப்படி என ஓயாது உழைத்தவள்.
தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் பிள்ளைகளுக்கு வாரி வழங்கியவள்.
எந்த வேலையும் கற்றுக்கொண்டு செய்யக்கூடிய திறன் கொண்டவள்.
அறிவியல் கூறிய எந்த வரம்பிற்கும் அடங்க மறுத்தவள். அந்த வரம்பிற்குள் இல்லாமலேயே வாழ்ந்து காட்டியவள்.
 
தாயாய்,​அம்மாயியாய் ​,​தோழியாய்,​ சண்டைக்காரியாய், குழந்தையாய் பல பரிமாணங்களை தந்தவள். 

உன் வதங்கிய குண்டாவினுள்ளும் பழைய சேலையினுள்ளும் எங்கள் இளமைக்கால நினைவுகள் பொதிந்துள்ளது.ஆண்டிக்காடு ஏரியின் மேல் உன் முந்தானையை பிடித்துக் கொண்டு எத்தனை முறை நடந்திருப்போம்.கொல்லங்காட்டிலும் கொல்லையிலும் எத்தனை ஆயிரம் முருங்கை காய்களை பறித்திருப்பாய்.

உன் முந்தானையின் வா​​சமும் மடியின் அரவணைப்பும் இல்லாமல் ஏங்குகிறோம்.

இப்படி ஒரு உறவை இனி எங்கு சென்றும் பெற இயலாது.

அரிதினும் அரிதான உறவு நீ.யாருக்கும் கிடைக்கிறதா அன்பு நீ.

நீ வளர்த்த 4 கொள்ளுப் பிள்ளைகள் உன் பாசத்தையும் பண்பாட்டையும் கடத்தட்டும்.

உழைப்பு,தைரியம், அன்பு, உண்மை , சகிப்புத்தன்மை இவற்றை வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தாய். வாழ்க்கையை இயல்பாய் தைரியமாய் கடந்த  நீ, உன் வாழ்வையே எங்களுக்கு பாடமாய் விட்டுச் சென்றுள்ளாய்.

நீ கொடுத்த பாடத்தை எடுத்துக்கொண்டு நீ இல்லாமல் பயணிக்க போகிறோம். 

அடுத்த முறை மனிதனாகப் பிறப்போம் எனில் நீயே​ எங்கள்​ அம்மாச்சியாக வரவேண்டும்.

போய் வா திருமகளே​!​ லட்சுமியே​!​ எங்கள் குடும்ப சாமியே​!​

- உன் நினைவுகளை சுமக்கும் நாங்கள் .....

​​

Saturday, March 8, 2014

குடும்ப புரட்சி !!!


மகளிர் தினம்..வாழ்த்துக்களும் பாராட்டுகளும் வந்து குவிகிறது பெண்களுக்கு..
முதலில் நானும் வாழ்த்தை பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்..
பெண்களுக்கு உரிமை இல்லை சுதந்திரம் இல்லை என்று எவரையும் குறை கூறும் வாதமாக நான் இதை வைக்கவில்லை..
பெண்களாகிய நம்மவர் அனைவரையும் கேள்விக் கூண்டில் நிறுத்தும் வாதமாகவே இதை வைக்கிறேன்..அதிலும் குறிப்பாக படித்த திருமணமான குடும்ப பொறுப்பு வகிப்பவர்கள் இதில் முக்கிய அங்கம் வகிப்பர் ..
ஒரு நாடு முன்னேற ஒவ்வொரு குடும்பமும் முன்னேற வேண்டும்..இது நான் கூறும் கருது அல்ல..பெரிய மகான்கள் கூறியது..
பெண்களாகிய நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்..நமது கடமையை சரிவர செய்கிறோமா என்ன ? நினைவு தெரிந்ததில் இருந்து கல்வி கற்கிறோம் வேலை செய்கிறோம் பின்னர் திருமணம்...அதற்கு பின்னர் சிந்தனையை, வட்டத்தை மிக மிக குறுக்கிக் கொள்கிறோம்..சிலர் திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு செல்வதை கூட நிறுத்திக் கொள்கின்றனர்..சரி வேலைக்கு செல்கிறார்களா,இல்லையா என்பது இங்கு வாதம் இல்லை..அது அவரவர் விருப்பம்..எனவே அதை விடுங்கள்..
அனால் குடும்பத்தை நிர்வகித்துக் கொள்கிறோம் என்று நாம் ஒரு கடமையை கையில் எடுக்கிறோம்..அதை ஏன் பெரும்பாலானோர் சரி வர செய்வது இல்லை..நீங்கள் கேட்கலாம் ..ஏன் நான் என் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்கிறேன்..குடும்பத்தினரோடு அன்போடு கனிவோடு பண்போடு இருக்கிறேன்..சமைக்கிறேன்..வீட்டை கவனித்துக் கொள்கிறேன் என்று கூறுகிறீர்களா..எல்லாம் சரி..ஆனால் கடமை என்று நினைத்து செய்யும் இந்த செயல்கள் உங்கள் குடும்பம் என்ற குறுகிய வட்டத்தோடு நின்று விட்டதே..நம் குடும்பத்தை பாதுகாக்கும் இந்த சமுதாயம் எங்கே ..அதை மறந்து விட்டோமே !!
குடும்ப பெண்களின் எண்ணம்,சிந்தனை எல்லாமே பணம் ஈட்டுவது,பொருள் வாங்குவது,மனை கட்டுவது,குழந்தை வளர்ப்பது,நவ நாகரீகத்தோடு அந்தஸ்தோடு பகட்டாக வாழ்வது என்று சுருங்கி விட்டதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டும்..சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய முடியும் என்று நினைகிறீர்களா..நம்மால் மட்டுமே முடியும் சில செயல்கள் உண்டு..
நாம் நினைத்தால் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க இயலாதா..
நாம் நினைத்தால் மாத வருவாயில் ஒரு சிறு தொகையை ஆதரவற்ற குழந்தைகளின் எழுத்தறிவிற்கு உதவ இயலாதா..நாம் நினைத்தால் வருமான வரியை நியாயமாக செலுத்த இயலாதா ..நாம் நினைத்தால் நம் தெருவை சுகாதாரமாக வைக்க இயலாதா ..எல்லாவற்றிக்கும் மேலாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த இயலாதா(நீரின் அவசியத்தை இன்னும் பத்தே ஆண்டுகளில் நாம் புரிந்து கொள்வோம்)..
இவை அனைத்தையும் கல்வி அறிவு இல்லாத பெண்கள் புரிந்து கொள்வது கடினம் ..அவர்கள் மனதும் சமுதாயம் என்ற அளவுக்கு விரிய மறுக்கும்..ஆனால் படித்து பட்டம் வாங்கி குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் ஏன் இதை செய்யவில்லை...எத்தனை பேர் இன்னும் தன் குடும்பம் மட்டுமே என்று சுருக்கி வைத்துள்ளனர்.சரி கூறுங்கள் எத்தனை பெண்கள் முதலில் நியாய விலை கடைக்கு செல்கிறீர்கள்..உங்களுக்கு வசதி அதிகம் எனில் அங்கு பொருள் வாங்க வேண்டாம்..ஆனால் அங்கு உள்ள குறைபாடுகளை அரசாங்கத்திற்கு தெரியப் படுத்தலாம் அல்லவா ..
சரி அது கூட வேண்டாம் ..எத்தனை பேர் நிலத்தடி நீர் குறைவதை பற்றியும் ,புவி வெப்பமயமாதல் பற்றியும் கவலை கொண்டுள்ளோம் ..இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள்..ஒவ்வொரு குடும்பமும் சிறிது ஒழுங்கு செய்தால் போதும்..அது பெரிய அளவில் மாற்றத்திற்கு வழி வகுக்கும்..
இவை அனைத்தையும் செய்யாமல் பின்னர் என்ன கடமையை செய்வதாக பறைசாற்றி கொள்கிறோம்..இப்படியே நாம் குறுகிய மனப்போக்கோடு சுயநலமாக இருந்து நம் வீட்டில் ஒரு நல்ல குழந்தையை உருவாக்கலாம் ..ஆனால் இனி வரும் காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து இந்த உலகத்தை பார்க்கும் போது
அதற்கு நல்ல காற்று கிடைக்காது...
நல்ல தண்ணீர் கிடைக்காது..
நல்ல மண் வாசனை கிடைக்காது..
நல்ல மழை கிடைக்காது..
நல்ல எண்ணம் கொண்ட மக்களை உள்ளடக்கிய சமுதாயம் கிடைக்காது..
பெண் குழந்தைகள் தெருவில் நடக்க சுதந்திரம் கிடைக்காது..
எல்லாவற்றிக்கும் மேலாக நோய் நொடியற்ற இனிமையான வாழ்வு கிடைக்காது..
இவை அனைத்தும் குறையும் போது நாம் மெச்சிக் கொள்ளும் நம் கலாச்சாரமும் சீரழியும்..
இதற்கு முக்கிய காரணமாக ஒவ்வொரு குடும்ப தலைவியும் பொறுப்பு வகிப்பர்..
எனவே சிந்தனையை விரிதாக்குவோம்..
குடும்ப புரட்சியை உருவாக்குவோம்..இது யாரையும் திருத்துவதற்கு அல்ல..நம்மை நாமே சீர் செய்து கொள்ள..விட்டொழிப்போம் அறியாமையை!! உரிமையை நாமாக எடுத்து எழுச்சியை உண்டாக்குவோம்.. வேறெங்கும் அல்ல..நம் குடும்பத்தில் :-)
கடைசியாக ஒன்று...சமுதாய அக்கறை கொண்டுள்ள பல பெண்கள் உள்ளனர் ..அவர்களை இத்தினத்தன்று தலை வணங்குகிறேன் ..

Sunday, August 18, 2013

விடுதலை நாள் அன்று !!

66- ம் சுதந்திர தின நாள் வந்து விட்டது..
எப்பொழுதும் என் அழைப்பை ஏற்று வரும் 
என் எழுதுகோல் இன்று ஆர்வத்துடன் தானாகவே 
வந்து விட்டது...சரி என் இந்தியாவில் சுதந்திரத்துக்கு 
பஞ்சமே இல்லை..உனக்கு மட்டும் என்ன குறைவு ..
உன் சுதந்திரத்துக்கு நான் தடையாக இருக்கவில்லை ..
நீ உன் உல்லாச நடைசெல் என்றேன் ..பின்னர் தான் உணர்ந்தேன்..
இதற்கு சுதந்திரம் கொடுத்தது தவறு என்று..
எத்தனை கேள்விகள் !!விடை அளிக்கவே இயலவில்லை..

ஆம்..முதல் கேள்வியே என்னை அதிர வைத்துவிட்டது..
என் எழுதுகோல் கேட்கிறது ?? விடுதலை நாள்..இன்று தலைவர்களின் நினைவு மண்டபங்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழியுமா ?? 
இல்லை இல்லை மக்கள் அங்கு எல்லாம் செல்ல மாட்டார்கள் ..
ஓ !! அப்படியெனில் பள்ளி கூடங்களில் எல்லாம் வரலாற்றைப் பற்றி இந்நாளில் கூட்டம் கூட்டப்படுமா ??
இல்லை இல்லை ..பள்ளிகூடங்களுக்கு அன்று விடுமுறை என்றேன்..
ஓ !!அப்படியெனில் ஒவ்வொரு வீதிகளிலும் அவர்கள் தியாகம் நினைவு கூறப்படுமா ??
இல்லை இல்லை கூட்டங்கள் எல்லாம் கட்சிகளுக்காக மட்டுமே..இதற்கெல்லாம் பெரும்பாலும் இல்லை ..
ஓ !! அப்படியெனில் தொலைகாட்சிகளில்அரும்பெரும் அத்தகைய காட்சிகளை கொண்ட படங்கள் ஒளிபரப்படுமோ ?? 
இல்லை இல்லை தொலைகாட்சிகளில் புதிய படங்களை பற்றி தான் வரும்..
ஓ !! அப்படியெனில் உங்கள் வரலாற்றை நீங்கள் நன்றி பாராட்டும் நாளே உங்களிடம் கிடையாதா ???
இவ்வளவு கேள்விகள்  கேட்டது போதும் உனக்கு சுதந்திரம் அளித்தது தவறு என்று கூறிவிட்டு மூடிக்குள் அடைத்து விட்டேன் எங்கள் அரசியல்வாதிகளைப் போன்றே!!

​ஒரு நாட்டின் இளைநர்களுக்கு அதன் வரலாறு தெரிந்திருப்பது மிகவும் அவசியம்..ஆனால் இந்திய வரலாறு ??? ​

Sunday, April 7, 2013

மூன்றெழுத்து !!!


ஹ்ம்ம் ...இந்த மூன்றெழுத்துக்கள் மனித வாழ்வை
படுத்தும் பாடுகள் தான் எத்தனை ...
பற்று ,பாசம் ,நேசம் ,பரிவு ,புகழ் ,கற்பு ,
நட்பு ,வறுமை ,பணம் ,சோகம் ,களவு ,
மோகம்,மௌனம் ,மானம் இப்படி 
மூன்றெழுத்தைக் கொண்டு இவைகள் 
ஆடும் ஆட்டத்தை சொல்லத் தேவையில்லை..
உணர்ந்து கொண்டும் அனுபவித்துக் கொண்டும் தான் இருக்கிறோம் ..
இவை அனைத்தும் சேர்ந்து மனிதனை முழுமை என்ற 
மூன்றெழுத்தை அடையவிடாமல் தடுகிறது ..

Saturday, April 6, 2013

என் இலங்கை தமிழர்களுக்காக !!!!

சிட்டுக்குருவியே ஏ சிட்டுக்குருவியே !
ரம்மியமான இயற்கை எழுனூடே தேனிசை போல் எழுந்த உன் குரல் கேட்டு கண் விழித்தேன்..
என்ன ஒரு அமைதி ..லேசாய் சோம்பல் முறித்து ஒருவாறு அன்றைய பயணத்தை தொடங்குகிறேன்..
என் இனிமையை சொல்லப் போனால் ஜன்னலின் ஓரமாய் வீசும் காற்று கூட எனக்கு இனிமை அளிக்கிறது..
நான் மட்டுமல்ல ...என் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இனிமையாய் தான் பொழுதை தொடங்குகின்றனர்...ஏனெனில் எது உள்ளதோ இல்லையோ  சுதந்திரம் உள்ளது அல்லவா !

ஆனால் இதே இன மக்கள் தான் கடல் தாண்டி 1200  கி.மீ தொலைவில் இலங்கை என்ற குட்டித் தீவில் வசிக்கின்றனர்..
சும்மா செல்லவில்லை குருவியே ! இந்தியப் பேரரசர்களால் பெருமதிப்போடு கௌரவத்தொடு பல ஆண்டுகளுக்கு முன் மான மரியாதையுடன் சென்றனர்..
ஆனால் அவர்களது இப்போதைய நிலை ??
எங்கள் இந்திய நாட்டில் ஒரு நாய்க்கு இருக்கும் சுதந்திரம்(கட்சிக் கொடிமரத்தை பார்த்தால் கூட கால் தூக்கும்) கூட அவர்களுக்கு அங்கு இல்லை..

அப்படி என்ன நிலை என்று கேட்கிறாயா ?
எப்பொழுதும் போர் ஆவணத்தை பார்க்கும் நிலை..
அடுத்த நிமிடம் எவன் என்ன செய்வானோ என்ற நிலை..
சராசரி மாணவன் தன் கல்வி இலட்சியங்கள் 
நிறைவேறவாய்ப்பே வராதோ என்ற எதிபார்போடு கூடிய நிலை..
அடுத்த வேலை உணவுக்கு என்ன நேருமோ என்ற நிலை..
பெண்கள் தங்கள் கற்பிற்கு எவன் உலை வைப்பானோ என்ற அச்சத்தோடு கூடிய நிலை..
எவரேனும் இதற்கு எல்லாம் தீர்வு காண மாட்டாரோ என்ற ஏக்கம் நிறைந்த நிலை..
எல்லாவற்றிகும் மேலாக பக்கத்து நாட்டிற்கு அகதியாய் செல்லும் போது அவர்களால் இழிவு படுத்தப்படும் நிலை..



போர் காலத்தில் அங்கு நடந்த கொடுமைகளைக் கேட்டால்  இவை எல்லாம் மாந்தர்கள் செய்யும் செயல்கள் தானா  என நீயே கேவலப்படுதுவாய்..

இப்படி அவர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பார்க்கும் போது இறைநிலையிடம் ஏன் படைத்தாய் என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது ...




"ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்ல பல புயல்களை கடக்க வேண்டுமாம்"...ஆனால் இவர்கள் இன்னும் எத்தனை புயல்களை கடக்க வேண்டும்...கடைசி வரைக்கும் அவர்கள் வாழ்வு  தென்றலை பார்காமலேயே ஏன் அதன் வாசத்தை கூட உணராமல் முடிந்து விடுகிறது!!


இதை எல்லாம் என் நீங்கள் தட்டிக் கேட்கக் கூடாது என்று கேட்கிறாயா குருவியே!!
எங்கள் மாநிலத்திலும் பல ஆயிரம் பேர் இதை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர்..
ஆனால் எங்கள் ஆட்சியாளர்கள் அதை வைத்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு மகான் கூறினார் உலகி நாடுகளிலேயே இந்தியா தான் சித்தர்களும் ஞானிகளும் அதிகம் வாழும் நாடு.. எனவே உலக அமைதியை முன் எடுத்துச் செல்ல இந்தியாவிற்கு தான் எல்லா தகுதியும் உண்டு என்று.. அப்பேற்பட்ட நாட்டை எங்கள் ஆட்சியாளர்கள் அவலங்களை கை கட்டி வேடிக்கை பார்க்க செய்து விட்டனர் ...அட உலக அமைதிக்கு கூட  வேண்டாம் இலங்கை அமைதிக்கு குரல் கொடுக்க கூடாதா??பெரிதாய் ஒன்றும் வேண்டாம் அவர்களுக்கான வாழ்வுரிமை ,சுதந்திரம் இதை அளிக்க இந்தியா நினைத்தால் இயலாதா ??சுய லாபம் கருதி விளையாட இது என்ன மைதானமா??பல ஆயிரம் பேரின் உயிரும் உணர்வும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா!!கடைசிக்கு உதவி செய்யா விட்டால் கூட பரவாயில்லை..உபத்திரம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா..அது என்ன உபத்திரம் என்று கேட்கிறாயா!!இங்கு தமிழ் நாட்டில் திரள் திரளாய் மக்கள் போராடி கொண்டிருகின்றனர்..ஆனால் பெரிய புள்ளிகளோ அந்த ரஜ பக்சே வை அழைத்து வந்து ஊர் சுற்றி காண்பிகின்றனர்..இங்கு யார் அழுதார்கள் அவன் மகனுக்கு விருது வழங்கவில்லை என்று..இப்படி எல்லாம் செய்தால் வன்முறை தான் வளரும்..அரசாங்கமே அதை ஊக்குவிப்பது போல் உள்ளது..

திறமான ஆட்சி நடத்துவதாய் பறை சாற்றும் ஆட்சியாளர்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்..
"உலகிலுள்ள பொறுப்புடைய தலைவர் எல்லாம் உயிர் அறிவை உள் உணர்வாய் பெற வேண்டும்" என்றார் வேதாத்திரி மகரிஷி..நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுப் பர்ருங்கள் ..

சரி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று கேட்கிறாயா குருவியே!!
தீர்வு இல்லை...ஆனால் ஒன்று மட்டும் சொல்ல  இயலும்.திண்ணிய எண்ணம்..இலங்கை தமிழர்கள் கொடுமைகள் இன்றி சுதந்திரமாய் வாழ விரைவில் ஒரு வழி வேண்டும் என்ற ஒட்டுமொத்த  தமிழர்களின் எண்ணம்  ஒரு நாள் நிச்சயம்  நிறைவேறும்...ஈழம் இறக்கவில்லை ..அது புதியதோர் விடியலை நோக்கி மீண்டும் பிறக்கும்!!

நான் சொன்ன இந்த வரலாற்றை கேட்டு நல்ல வேலை தமிழனாக பிறக்கவில்லை என்று நினைகிறாயா குருவியே...
அதுவும் நல்லது தான் நீயாவது நிம்மதியாய் இரு!!
(உனக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை!!அந்த பக்கம் மறந்து கூட சென்று விடாதே ..தமிழ் நாட்டில் இருந்து வந்தாய் என்றால் உன்னையும் விட்டு வைக்க மாட்டார்கள் அந்த வெறியர்கள்!!)

Saturday, September 29, 2012

நவீன மாப்பிளைகள்!!

வீரமும் தன்மானமும் உள்ள எந்த ஆண் மகனையும் சாடி இது எழுதப்படவில்லை..
அவர்கள் எவரேனும் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து கொதிப்டையாதீர்கள்..
ஆண் பெண் சமம் என்ற இன்றைய சமுதாயத்திலும் பெண்ணைப் பெற்ற குடும்பத்தினர் படும் துயரத்தை காட்டவே இது எழுதப்பட்டுள்ளது..

இரு மனங்கள் கூடி ஓருயிரும் ஈருயிருமுமாய் 
ஒருவருக்கொருவர் தம்மை அர்ப்பணித்து ஒன்றாய் கலப்பதே 
திருமண வாழ்க்கையாம்...


அத்தகைய திருமணப் பொருத்தங்கள் நம் தமிழ்நாட்டில் இப்பொழுது எப்படி பார்க்க படுகின்றன தெரியுமா??
மனம்,குணம்,தியாக உணர்வு,பண்பு ..இவைகளில் எதற்குமே முக்கியம் இல்லை.. இதையும் தாண்டி பணம்,பொன்,அதிலும் முக்கியமாக தோட்டம்,பெண் படித்திருக்க வேண்டும்..
இந்த வரனிடம் இதெல்லாம் குறைவா ? 
அடுத்த வரனிடம் அதிக வரவா? ஓடு அங்கே...
இவர்களின் உணர்வு எப்படி போனால் நமக்கென்ன ..
இவ்வாறு நாளொன்றுக்கு ஒரு குடும்பத்தில் ஒரு சம்பவம்..எங்கே போகிறது இச்சமுதாயம்??
யாரோ ஒருவர் உருகி உருகி உழைப்பதை உழைப்பே இல்லாது 
முன்றாவது மனிதர்கள் பிடுங்கி கொள்கின்றனர்..அதற்கு அவர்கள் இட்டு கொள்ளும் பெயர் திருமணமாம்!! ம்ம்ம் மறைமுகமான சுரண்டல் ..

நாங்கள் வரதட்சணை எல்லாம் வாங்குவது இல்லை..நீங்கள் உங்கள் பெண்ணின் பாதுகாப்பிற்கு கொடுங்கள் என்று நவ நாகரீகத்தில் நாசுக்காக பணம் வாங்கும் மதிப்பிற்குரிய மாப்பிள்ளைகளே !!
21 - ம் நூற்றாண்டின் பாரதி வழி பெண்களாகிய நாங்கள் வாக்களிக்கிறோம் இதோ..
எங்களை நற்குணத்தோடு நற்பண்போடு வசதிக்கு மீறினாலும் பரவாயில்லை கடனை வாங்கியாவது எங்கள் பெற்றோர்கள் உங்களை கைபிடிக்க வைப்பார்கள்.. நாங்கள் உடலில் ஆரோக்கியம் உள்ள வரை உங்களுக்கு தினமும்  உண்ண உணவு , உடுக்க உடை ,காருக்கு பெட்ரோல் செலவு எல்லாவற்றையும் ஏற்கிறோம் ...நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி இல்லை குட்டிச் சுவரில் அமர்ந்து நாட்டுக் கதை பேசினாலும் சரி நாங்கள் எதுவுமே கேட்க மாட்டோம் ..ஆண் என்ற கர்வத்தில் நீங்களும் ஆண் மகனைப் பெற்றோம் என்ற கர்வத்தில் உங்கள் பெற்றோரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இளைப்பாறுங்கள்..
ஆனால் தன்னம்பிக்கை, தன்மானம் மற்றும் தமிழனுக்கே உரித்தான வீரம் ஆகியவற்றை மட்டும் எங்களுக்கு விட்டு கொடுத்து விடுங்கள்...

இறுதியாக பெண் வீட்டாரும் உங்கள் பெண்ணிற்கு குணம் பார்த்து வரன் தேடுங்கள் ..பணம் பார்த்து அல்ல..
இல்லறம் என்பது உன்னதமானது !!அதை இரு வீட்டாரும் வியாபாரம் ஆக்காதீர்கள்..

Saturday, June 9, 2012

என் தனிமை



தனிமை ..வறுமையினும் கொடியது
 என்று நான் எண்ணிய காலங்கள் உண்டு ..
 இல்லை.. இல்லவே இல்லை..
             
தாய் நாட்டைப் பற்றியும் அதன் வரலாற்றைப்
 பற்றியும் சிந்திக்க வைத்தது என் தனிமை ..

இயற்கையைப் பற்றியும் அதன் சௌந்தரியத்தையும்
 கண்டு ஆனந்த களிப்படைய வைத்தது என் தனிமை ..

 வீசும் காற்றின் வாடையையும் அதன்
 அழுத்தத்தையும் உணர வைத்தது என் தனிமை ..

சின்னஞ்சிறு பறவைகளின் மொழிகளையும்
 அதன் ரீங்காரத்தையும் ரசிக்க வைத்தது என் தனிமை ..

 மேலே வானத்தை பார்க்க வைத்து
 மனதை விரிவடையச் செய்தது என் தனிமை ..

 எனக்குள் உள்ள என்னிடமே என்னை
 மனம் விட்டு பேச வைத்தது என் தனிமை ..

 எல்லாவற்றையும் விட 
மனதில் இருந்த எல்லா சுமைகளையும் அகற்றி
 மனதை லேசாக்கிக் காட்டியது என் தனிமை ..

 உணர்தேன்..தனிமையிலும் இனிமை..
 தனிமையும் ஒரு சுகம் தான் !!